SLS தரச்சான்று இல்லாத பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களுக்கு ஒக்டோபர் 8 முதல் தடை!
SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், போக்குவரத்து செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்தும் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் (SLSI) வழங்கும் SLS தரச்சான்றிதழ் முத்திரையைக் கொண்ட பெண்களுக்கான சுகாதாரத் துவாய்கள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த உத்தரவு, ஒருமுறை பயன்படுத்தப்படும் சுகாதாரத் துவாய்கள் மற்றும் Panty Liners (மெல்லிய சுகாதாரத் துவாய்கள்) ஆகியவற்றிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் சுகாதாரத் துவாய்கள், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தின் இறக்குமதி தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை முறையின் கீழ் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாதிருந்தால், அவற்றை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல் அல்லது விற்பனை செய்தலும் தடை செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தால் இந்த தயாரிப்புகளுக்கான தரநிலைகளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களும், இந்த உத்தரவின் கீழ் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
