நாட்டில் 237 மூளைக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம்!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் (மெனிஞ்ஜைட்டிஸ்) தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்துவதுடன், கொதிக்கவைத்து ஆறவைத்த நீரையே அருந்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி தபரேரா, இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் வைரஸ் மூளைக்காய்ச்சல் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவித்தார்.
முதல் நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் ரிக்கிலகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவை உள்ளிட்ட பகுதிகளிலும் மேலும் பல நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பதிவான நோயாளிகளில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மே 31 ஆம் திகதி நிலவரப்படி, 59 பேர் மட்டுமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏனையோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை காணப்படுகின்றன. பெரும்பாலான நோயாளிகள் சில நாட்களுக்குள் முழுமையாக குணமடைந்து விடுவார்கள் என்றும் வைத்தியர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளார்.
நோய் பரவலுக்கான காரணங்களை ஆராயவும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும், அசுத்தமான குடிநீர் ஆதாரங்கள் நோய் பரவலுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளும் விசேட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறுவர்கள் ஒருவருக்கொருவர் உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எப்போதும் சுத்தமான மற்றும் கொதிக்கவைத்து ஆறவைத்த நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
