நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!
நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (27.07.2026) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
