பேருந்தில் மயக்கப் பானம் வழங்கி பெண்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த முதியவர் கைது!


அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 17 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் தங்க நகைகளும் இந்தச் சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அநுராதபுரம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு தீவிர விசாரணைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து கிடைத்த தகவலின் பேரில், 17 ஆம் திகதி மாலை பண்டுளகம பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணைகளில் தெரியவருவதாவது, கடந்த 2 ஆம் திகதி இரவு, அநுராதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் பயணம் செய்த மூன்று பெண்களுக்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிற்றுண்டி மற்றும் பானங்களை வழங்கியுள்ளார். அவற்றை உட்கொண்ட பின்னர் பெண்கள் மயக்கமடைந்த நிலையில், அவர்களிடமிருந்த பணமும் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை முன்னிட்டு, பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது தெரியாத நபர்களிடமிருந்து வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களை ஏற்றுக்கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.