மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் வழக்கு - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் நால்வரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ. தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து தங்க நகைகளை வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மீதமுள்ள நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, வவுணதீவு கொத்தியாபுலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். மேலும், முன்னதாக காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன், அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தர அவர்களின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன அவர்களின் கண்காணிப்பில், கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் அடிப்படையில், வவுணதீவு காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர், 22 வயதுடைய தம்பி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை வாங்கிய ஊறணி மற்றும் திருகோணமலை வீதியைச் சேர்ந்த இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு மேலாக, மயக்க மருந்துகளை பெற்றுக்கொடுத்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அவற்றை விநியோகித்த நபரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவர்களில் முச்சக்கர வண்டி சாரதி ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
