முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர் - ஐஸ் போதைப்பொருளுடன் கைது!


தெஹிவளை பகுதியில் முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (19) தெஹிவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (17) வைத்திய வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 74 வயதுடைய முதியவர் தரையில் தள்ளப்பட்டு, அவரிடம் இருந்த 2,100 ரூபா பணம் பறிக்கப்பட்டது.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தினர். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 5,200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று (20) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.