மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA அறிக்கை


மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) தனது மார்ச் 2026 குறுகிய கால எரிசக்தி கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் சராசரி விலை 2025 ஆம் ஆண்டில் ஒரு பேரலுக்கு 69 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் அது 79 டொலராக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டில் அது 64 டொலராக குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெட்ரோலின் சில்லறை விலை 2025 ஆம் ஆண்டில் ஒரு கேலனுக்கு 3.10 டொலராக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் 3.34 டொலராக உயரக்கூடும் என்றும் 2027 ஆம் ஆண்டில் 3.18 டொலராக குறையக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் தினசரி 13.6 மில்லியன் பேரல்கள் அளவில் இருக்கும் எனவும், 2027 ஆம் ஆண்டில் அது 13.8 மில்லியன் பேரல்களாக அதிகரிக்கக்கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இயற்கை எரிவாயு விலை 2025 ஆம் ஆண்டில் Henry Hub அடிப்படையில் MMBtu ஒன்றுக்கு 3.53 டொலராக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் 3.76 டொலராகவும் 2027 ஆம் ஆண்டில் 3.85 டொலராகவும் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2025 ஆம் ஆண்டில் 2.2 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாகவும் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 9 ஆம் திகதி நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 94 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாகவும், இது ஆண்டின் தொடக்கத்தை விட சுமார் 50 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. அடுத்த இரண்டு மாதங்களிலும் இந்த விலை 95 டொலருக்கு மேல் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து சீரானதும் விலைகள் குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், 2027 ஆம் ஆண்டளவில் தினசரி உற்பத்தி 13.8 மில்லியன் பேரல்களாக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி தொடர்பில், அமெரிக்காவில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி சுமார் 7 சதவீதம் குறையக்கூடும் என்றும், சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு சுமார் 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் இயற்கை எரிவாயு விலை உயர்ந்திருந்தாலும், அமெரிக்காவில் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நிலவிய மிதமான வெப்பநிலை காரணமாக அமெரிக்காவில் எரிவாயு கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பில், அமெரிக்காவின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் 2025 ஆம் ஆண்டில் 4.9 பில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த நிலையில், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் அது சற்றே குறைந்து 4.8 பில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தரவுகள் அனைத்தும் மார்ச் 2026 அறிக்கையின் அடிப்படையில் கணிக்கப்பட்டவை என்பதுடன், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதனைப் பொறுத்து இந்த விலை கணிப்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.