ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கக்கூடும்!


மத்திய கிழக்கின் முக்கிய கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பு (UNCTAD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய நிலைமை ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள ஏழை நாடுகளில் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட UNCTAD இன் விசேட அறிக்கையில், எரிசக்தி, உரம் மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதே உணவுப் பொருட்களின் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக உர விநியோகத்தில் ஏற்படும் தடைகள் விவசாய உற்பத்தியை நேரடியாக பாதிக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணையின் பங்கு மிக முக்கியமானது என்றும் அந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன்படி,

  • கச்சா எண்ணெய் – உலக விநியோகத்தில் சுமார் 38%
  • LPG எரிவாயு – உலக விநியோகத்தில் 29%
  • LNG (இயற்கை எரிவாயு) – உலக விநியோகத்தில் 19%

இந்த நீரிணை வழியாகவே கடத்தப்படுகின்றன.

மேலும், கப்பல் வழியாக உலகளவில் கொண்டு செல்லப்படும் உரங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு (33%) இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே பயணிக்கின்றன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நீரிணை ஊடாகப் பரிமாறப்படும் மொத்தப் பொருட்களில் 84 சதவீதம் ஆசிய நாடுகளுக்கே சென்றடைகின்றன. இதனால், விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டால் அதன் நேரடி தாக்கத்தை ஆசியப் பிராந்திய நாடுகளே மிகவும் கடுமையாக எதிர்கொள்ள நேரிடும் எனவும் UNCTAD தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை உலகளாவிய வர்த்தக ஸ்திரத்தன்மையை பாதிப்பதோடு, ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.