தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!


நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health Survey) இன்று (10) ஆரம்பிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு நாடுகளின் வாய்வழி சுகாதார நிலவரங்கள் குறித்துப் புரிந்துகொள்வதற்காக, குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவிலான வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்துள்ளது.

அதற்கமைய, இன்று (10) முதல் நவம்பர் மாதம் வரை நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (Randomly selected) 10,000 பேரிடம் தரவுகளைச் சேகரிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் பாடசாலை மாணவர்களுக்கான தரவுகள் பாடசாலை வளாகங்களுக்குள்ளும், பெரியவர்களுக்கான தரவுகள் வீடுகளுக்குச் சென்றும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதன்போது வாய்வழி சுகாதாரம் தொடர்பான வினாக்கொத்துக்களைப் பூர்த்தி செய்வதுடன், வாய்வழி சுகாதாரப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தரவுகள் எதிர்கால சுகாதாரத் திட்டமிடல்களுக்கு மிகவும் அவசியமானவை என்பதால், வீடுகள் மற்றும் பாடசாலைகளுக்கு வருகை தரும் மருத்துவக் குழுவினருக்குப் பொதுமக்கள் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.