Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!
கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக சவூதி அரேபியாவின் உலக முஸ்லிம் இளைஞர் சபை (WAMY) தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ (இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்) வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக, 100,000 சவூதி ரியால்களை (சுமார் 26,000 அமெரிக்க டொலர்) மனிதாபிமான அடிப்படையிலான பங்களிப்பாக WAMY வழங்கியுள்ளது.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ரியாதில் உள்ள WAMY தலைமையகத்திற்குச் சென்று, அதன் பொதுச் செயலாளர் கலாநிதி சாலிஹ் பின் இப்ராஹிம் பாபேர் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்ட இந்தத் தாராளமான உதவிக்கு தூதுவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை மேம்படுத்துதல், கல்வி மற்றும் சமூக நல்வாழ்வை ஊக்குவித்தல் போன்றவற்றில் WAMY அமைப்பு இலங்கையுடன் நீண்டகாலமாகப் பேணி வரும் ஈடுபாட்டை தூதுவர் இதன்போது பாராட்டினார்.
1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட WAMY, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களை வலுவூட்டுதல், தலைமைத்துவப் பயிற்சி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் உலகளாவிய ரீதியில் ஈடுபட்டு வருகிறது.
மிதவாதம் மற்றும் அமைதியான சகவாழ்வை வலியுறுத்தும் இந்த அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் அரச சார்பற்ற நிறுவனங்கள் கட்டமைப்பிலும் அங்கத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
