நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழைக்கு வாய்ப்பு!


இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்த்திய, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும்.

மேல், தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கி.மீ. வரை அதிகரிக்கும்.

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது நடுத்தரமான அலையை கொண்டிருக்கும்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகள் சாதாரணமான அலைகளை கொண்டிருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.