சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது போர்த்துக்கல்!
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - போர்த்துக்கல் அணிகள் மோதின.
வலுவான ஸ்பெயின் அணி பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. மார்ட்டின் ஜூபி மெண்டி இந்த கோலை அடித்தார். போர்த்துக்கல் வீரர் நுனோ மென்டிஸ் 26 ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார்.
45 ஆவது நிமிடத்தில் மைக் கேல் ஒயர்சபல் ஸ்பெயின் அணிக்காக 2 ஆவது கோலை அடித்தார்.
இதன் மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
61 ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்து சமன்செய்தார்.
சர்வதேச அளவில் அவரது 138 ஆவது கோலாகும். இதன் மூலம் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.
கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை இரு அணிகளாலும் அடிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது.
இதில் 5 வாய்ப்புகளிலும் போர்த்துக்கல் கோல் அடித்தது. ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்தது. இதனால் போர்த்துக்கல் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி 2 ஆவது முறையாக இந்த பட்டத்தை வென்றது.