அரியாலை மனித புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!
யாழ். அரியாலை செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகளின் பரீட்சார்த்த அகழ்வுப் பணி நேற்று முன்தினத்துடன் (07) நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி நடவடிக்கைகளில் 19 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அடுத்தக்கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
இது உள்நாட்டுப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான நீண்டகாலமாக தாமதமாகி வந்த உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் குறிப்பிடத்தக்க விடயமாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா,
யாழ்.அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சார்த்த அகழ்விலிருந்து 19 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக்கூடுகளும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர் குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார். இந்த மனிதப்புதைகுழி பரீட்சாத்த அகழ்வு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்தினம் (07) முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அகழ்வுப்பணியை மேலும் 45 நாட்களுக்கு நீடித்து, நீதவான் ஆ.ஆனந்தராஜாவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
45 நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26 ஆம் திகதி நீதவான் அனுமதித்துள்ளார்.
குறித்த, உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.