சட்டத்தரணி ஒருவர் குறித்து போலியான தகவல்களை பரப்பியவர் கைது!


யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். 

இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், தனது பெயருக்கு அவதூறு ஏற்படும் வகையில் தனது புகைப்படத்துடன் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த சமூக வலைத்தள கணக்கு உரிமையாளரை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளத்தில் சட்டத்தரணி தொடர்பாக பதிவிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க கோரி இருந்தனர். 

ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமையால், அந்நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.