ஆப்கானிஸ்தான் நாட்டில் சதுரங்க விளையாட்டுக்கு தடை!
ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சில விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன் தினம் சதுரங்க விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
மத கலாச்சாரத்திற்கு எதிராக இந்த விளையாட்டு இருப்பதாக புகார்கள் எழுந்ததால் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறும் அதிகாரிகள், மத தலைவர்கள் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் கொடுக்கும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.
இஸ்லாமிய மத சட்டத்தில் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூதாட்டத்தை சதுரங்க விளையாட்டு ஊக்குவிக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.
தாலிபான் விளையாட்டு இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி இது குறித்து கூறுகையில், “இந்த விளையாட்டு இஸ்லாமிய கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை மத அதிகாரிகள் பரிசீலிக்கும் வரை தடை அமலில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தடை உத்தரவை மறு பரிசீலனை செய்ய எந்த கால அவகாசமும் கிடையாது என்பதுதான்.
ஆப்கன் தலைநகர் காபூலில் சதுரங்க விளையாட்டு முக்கியமானதாக இருக்கிறது. இந்த விளையாட்டு மிகச்சமீபத்தில்தான் பேமஸ் ஆனது.
வேலைவாய்ப்பு இல்லாதது, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சரிவு, பொழுது போக்கு மையங்கள் மற்றும் குறிப்பிட்ட சில விளையாட்டுகளையும் தடை செய்திருப்பது இளைஞர்களை சதுரங்கத்தை நோக்கி திருப்பியிருக்கிறது. இந்த விளையாட்டு வணிகமாக்கப்பட்டிருப்பதால் இந்த தடை உத்தரவு வணிக ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.