கொத்மலை பேருந்து விபத்து: விசாரணைக்கு விசேட பொலிஸ் குழு நியமனம்


நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை செய்ய முன்னால் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் 5 பேர் கொண்ட பொலிஸ் குழுவை பிரதி பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 22 பேர் உயிரிழந்துள்ளதோடு,  40 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விபத்துக்கான காரணங்களை ஆராயவும்,  எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதை தவிர்க்கவும் இலங்கை பொலிஸ் செயல்படுத்தக்கூடிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் குழுவுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.