மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு IMF அதிகாரி பரிந்துரை!


இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிரேஷ்ட அதிகாரி பீட்டர் புவர் பரிந்துரைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனால் மின் உற்பத்தி செலவுகளை முழுமையாக ஈடு செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் எதிர்காலத்தில் மின்சாரசபை அதிக நட்டம் அடையும் நிலை உருவாகலாம் என்றும், இதனால் அதன் கடன் சுமை அதிகரித்து, அரசாங்கத்திற்கும் பாரிய பொருளாதார சுமையாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மின்சார சபையின் செலவுகளை சமன் செய்யும் வகையில் கட்டண திருத்தம் அவசியம் என்றும், நட்டமடையாத விலை நிர்ணய முறைமையை செயல்படுத்தி, உரிய விலை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பீட்டர் புவர் அறிவுறுத்தியுள்ளார்.