கல்வி துறையில் நிகழவுள்ள மாற்றம் குறித்து பிரதமரின் அதிரடி அறிவிப்பு


நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை' ஒன்றை அமைப்பதற்கான திட்டம் தயாராகி வருவதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கல்லூரியில் மீகொட பகுதியில் அமைந்துள்ள கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிகழ்வில், கல்வித் துறையில் தொழில் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதே கல்விச் சபை அமைப்பதற்கான முக்கிய நோக்கமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு – 2026 முதல் அமல்

2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்பு, சிறந்த திறன்கள் கொண்ட, உறுதிமிகு மற்றும் வளமானவர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும், 2009 ஆம் ஆண்டில் கல்வி நிர்வாக சேவையில் இணைந்த அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புதிய கல்வி அமைச்சர் ஹரிணி தனது பதவியேற்பின் பின்னர் கல்வித் துறையில் முக்கிய மாற்றங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்ட மாற்றங்கள் – தரம் 1 மற்றும் 6 மட்டுமே முழுமையான மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தத்திற்கமைய,
தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டங்கள் முழுமையாக மாற்றப்படும்.
10ம் தர பாட முறைமை பகுதியளவில் மாற்றப்படும்.
ஏனைய தரங்களில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படாது.
2026 முதல் புதிய கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த மாற்றங்கள் மாணவர்கள் திறன் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.