நாசர் மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்; 50,000த்தை கடந்த பலி எண்ணிக்கை!
காசாவில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் உட்பட குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவலை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹமாஸின் அரசியல் பிரிவைச் சேர்ந்த இஸ்மாயில் பர்ஹோம் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்கிரமிப்பாளர்களின் நீண்டகால பயங்கரவாதத்தைத் தொடர்ந்து, உயிர்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அழிக்கும் இந்தக் குற்றச் செயலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளைப் புறக்கணித்து, மக்கள் மற்றும் தலைவர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொள்ளும் தொடர்ச்சியான இந்தக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் நேற்று (மார்ச் 23) அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் சலாஹ் அல் பர்தாவில் கொல்லப்பட்டார்.
அதிகாலைத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அவரது மனைவியும் உயிரிழந்தார். இதுகுறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவரது இரத்தம், அவரது மனைவி மற்றும் தியாகிகளின் இரத்தம், விடுதலை மற்றும் சுதந்திரப் போருக்கு உந்துசக்தியாக இருக்கும். குற்றவாளியான எதிரியால் எமது உறுதியையும் நோக்கத்தையும் முறியடிக்க முடியாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் இரண்டு மாதங்கள் நீடித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னர், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதால், பல மூத்த தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு மற்றும் சட்டமன்ற சபை உறுப்பினராகவும் இருந்த சலாஹ் பர்தாவில், காசாவில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தவர். அவரது மரணம் எதிர்கால போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2023 டிசம்பர் மாதம் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில், இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் மனிதாபிமான நெறிமுறைகளை மீறியவை என்று பல சர்வதேச அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.