எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை பெற்ற 3% தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
CPCயின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் நேற்று (பிப்ரவரி 28) நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளது.
மேலும், பணம் செலுத்திய பின்னர் மட்டுமே மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என CPC உறுதியளித்துள்ளதோடு, தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், எதிர்காலத்தில் பெற்றோலிய விநியோகஸ்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கலந்துரையாடல்களை நடத்த தயார் என CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாடு முழுவதும் எரிபொருள் பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.