ஐரோப்பிய ஒன்றிய உத்தரவின் பேரில் WhatsApp-இல் மீண்டும் ChatGPT சேவை!


ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில் ChatGPT மீண்டும் WhatsApp-இல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆறு மாதங்களாக WhatsApp-இல் ChatGPT-ஐ பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்ட நிலையில், 2026 ஜூலை 13 முதல் சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2025 ஒக்டோபரில் Meta நிறுவனம் WhatsApp Business API விதிகளில் மாற்றங்களை மேற்கொண்டு, ChatGPT மற்றும் Microsoft Copilot போன்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியதாகவும், இதற்குக் காரணமாக "சேவையக சுமை அதிகரிப்பு" என விளக்கமளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், 2026 ஜூன் 9 அன்று ஐரோப்பிய ஒன்றியம் Meta நிறுவனத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, WhatsApp API அணுகலை மீண்டும் வழங்குமாறு உத்தரவிட்டதாகவும், விதிகளை மீறினால் ஆண்டு வருமானத்தின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியப் பயனர்கள் சரிபார்க்கப்பட்ட எண்ணின் மூலம் WhatsApp-இல் ChatGPT-ஐ பயன்படுத்தி உரையாடல், குரல் உள்ளீடு, படங்களைப் பதிவேற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பட உருவாக்கம் உள்ளிட்ட வசதிகளைப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, ChatGPT-ஐ பயன்படுத்திய பின்னர் சில WhatsApp கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக சில பயனர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும், சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணை மட்டுமே பயன்படுத்துமாறு OpenAI அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.