புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் – மூவர் விளக்கமறியலில்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று பாடசாலை நேரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், உயர்தர வகுப்பில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள் இரும்புக் கம்பியுடன் மற்றொரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், முதலில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டதுடன், இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் கைது செய்த பொலிஸார், இன்று (14) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த மாணவர்களை ஜூலை 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இதனிடையே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
