வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமை!


வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுதல் மற்றும் விநியோகிக்கும் நடவடிக்கைகளில், புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு ஆண்டாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள், கடந்த ஜூன் 8ஆம் திகதி வேரஹெர அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக மீள ஆரம்பிக்கப்பட்டன.

இந்த இடைநிறுத்தம் காரணமாக சுமார் 10 இலட்சம் இலக்கத் தகடுகளின் விநியோகம் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலுவையை விரைவாகச் சரிசெய்து, எதிர்காலத்தில் இலக்கத் தகடுகளை தடையின்றி விநியோகிப்பதற்காக, தனியார் நிறுவனமொன்றுடன் 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஐந்து ஆண்டுகள் கால ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

இதற்கமைய, வேரஹெர அலுவலகம் இரு கட்டங்களாக தனது பணிகளை முன்னெடுக்கவுள்ளது. பகல் நேரத்தில் புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அச்சிடப்படவுள்ளதுடன், நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இரவு நேரத்தில் மேலதிக பணியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.