EPF, ETF செயற்பாடுகளை ஒருங்கிணைந்த நிர்வாகத்தில் கொண்டு வர அதிகாரபூர்வ குழு நியமனம்!
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அனைத்து செயற்பாடுகளையும் ஒரே ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கம், முதலாளிகள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முத்தரப்பு சபை மூலம் இந்த இரு நிதியங்களையும் ஒரே பொதுவான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயக்குவதே இதன் நோக்கமாகும்.
1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் 25 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இதன் சொத்து மதிப்பு 4.9 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். தற்போது இதன் நிதி முகாமைத்துவம் மற்றும் கொடுப்பனவுகளை மத்திய வங்கி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, உறுப்பினர் பதிவு மற்றும் சட்ட அமலாக்க பணிகளை தொழிலாளர் திணைக்களம் கவனித்து வருகிறது.
இதற்கமைய, புதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இரு நிதியங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப ஊழியர்களின் நிதிக்கான சட்ட மற்றும் நிதி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
