நெடுந்தீவுக்கான அரச கடற்போக்குவரத்து சேவை இன்று முதல் அதிகரிப்பு!
நெடுந்தீவுக்கான அரச கடற்போக்குவரத்து சேவை இன்று (22) முதல் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அதிகரிக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி காலை 6.15 மணி மற்றும் 6.45 மணிக்கு படகுச் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
அதேவேளை, குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 7.30 மணி மற்றும் 8.30 மணிக்கு சேவைகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாலை நேரங்களில் பயணிகள் தேவை அதிகரிக்கும் சூழ்நிலையில் மேலதிக அரச படகுகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன், நெடுந்தீவு – குறிகாட்டுவான் கடற்பாதையில் சேவையாற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள “வடதாரகை” மற்றும் “நெடுந்தாரகை” படகுகளின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், அவை மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சேவை விரிவாக்கம் மூலம் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து வசதிகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
