ஜனாதிபதி மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் சந்திப்பு!


இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company – CHEC) தலைவர் பாய் யின்ஷான் (BAI YINZHAN) உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் “நேரடி மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவத்தின்” காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு தங்களுக்கு பலத்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்ஷான் இங்கு குறிப்பிட்டார்.

குறிப்பாக, கொழும்பு துறைமுக நகர (Port City) சிறப்பு பொருளாதார வலயத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஊக்கத்தொகைகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட தலைவர், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளமையையும் பாராட்டினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) இன்றியமையாத காரணியாகும் என்பதை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கம் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை எட்டியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான திசையில் செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்கு அரசாங்கத்தால் வழங்கக்கூடிய உச்சக்கட்ட ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும், குறிப்பாக துறைமுக நகர வலயத்தை அபிவிருத்தி அடைந்த பொருளாதார வலயாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.

அதேபோல், அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’  சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் வழங்கிய ஆதரவிற்கும் ஜனாதிபதி தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பொது மேலாளர் சு போ (Su Bo) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.