பாடசாலைகளில் பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம்!


இலங்கையில் அடுத்த வருடம் முதல் பரீட்சைகள் மற்றும் தவணை விடுமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையை கடந்த 2020ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு 2027ஆம் ஆண்டு முதல் முழுமையாக கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கல்வி முறைமை தொடர்ச்சியான தடைகளை எதிர்கொண்டு வந்தது.

கோவிட் 19 பெருந்தொற்று, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற வானிலை போன்ற காரணங்களால் பாடசாலை நாட்காட்டி பாரியளவில் மாற்றமடைந்தது.

இந்தச் சீர்குலைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2027ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

2027ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்குவதற்கு ஏதுவாக, இந்த ஆண்டு (2026) எஞ்சியுள்ள இரண்டு பாடசாலை விடுமுறை காலங்களும் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு வழங்கப்படும் என தெரியவருகிறது.

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.