திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் : எச்.ஐ.வியை பரப்பிய இளைஞன்!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மனிதாபிமானத்தை உலுக்கிய ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணுக்கு, எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட தனது ரத்தத்தை ஊசி மூலம் வலுக்கட்டாயமாக செலுத்திய இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் நகரத்திற்கு அருகிலுள்ள போச்சாரம் பகுதியில் வசிக்கும் 24 வயதான இளம்பெண்ணுக்கும், அவரது உறவினரான இளைஞருக்கும் முன்னதாக திருமணம் செய்து வைக்க இரு குடும்பங்களும் முடிவு செய்திருந்தன.
ஆனால், திருமணத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அந்த இளைஞருக்கு HIV தொற்று இருப்பது உறுதியாகியதைத் தொடர்ந்து, பெண்ணின் குடும்பம் திருமணத்தை ரத்து செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், கடந்த மார்ச் 11ஆம் திகதி, பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்து மீண்டும் திருமணத்திற்கு சம்மதம் கோரியுள்ளார். பெண் மறுத்ததையடுத்து, முன்கூட்டியே தயார் செய்திருந்த தனது தொற்றுடைய ரத்தத்தை ஊசி மூலம் வலுக்கட்டாயமாக செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பயந்த இளம்பெண் ஆரம்பத்தில் இதை யாரிடமும் தெரிவிக்கவில்லை. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போச்சாரம் காவல்துறையினர் குறித்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில், அந்த இளம்பெண்ணுக்கு தற்போது HIV தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உறுதி செய்ய அடுத்த சில மாதங்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது.
