பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் - வெளியான அறிவுறுத்தல்!


பொதுமக்கள் அவசரப்பட்டு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே மேலும் கூறுகையில், புதிய வரி விதிப்பால் வாகனங்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படாது.

எனினும் கடந்த சில மாதங்களாக ஜப்பானில் வாகன விலை வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த விலைக்குறைப்பின் பலன் உள்ளூர் சந்தையில் பிரதிபலிக்கும் என்பதால், வரியினால் ஏற்படும் சிறு அதிகரிப்பு ஈடுசெய்யப்படும்.

இதன்படி, 2.5வீத வரி என்பது வாகனத்தின் பெறுமதிக்கு ஏற்ப சுமார் 75,000 முதல் 100,000 ரூபா வரை மட்டுமே மேலதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பல தனிநபர் இறக்குமதியாளர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்கின்றனர்.

எனினும், புதிய முறையில், வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிக்கும் முன்பே துறைமுகத்தில் வரியைச் செலுத்த வேண்டும். இதனால் அரச வருமானம் அதிகரிப்பதுடன், பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத அனைத்து இறக்குமதியாளர்களும் சமமாக வரி செலுத்துவது உறுதி செய்யப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.