தட்டுப்பாடின்றி எரிவாயு பெற நடவடிக்கை - 36 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் விநியோகம்!


நாட்டில் நிலவிவரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் நாடு தழுவிய ரீதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் நிலவிய எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணங்கள் குறித்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நலிந்த குருகுலசூரிய விளக்கமளித்துள்ளார்.

அதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிக்கும் பணிகள் இன்று (26) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளதாவது,

தற்போது நாளொன்றுக்கு 150,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.மற்றுமொரு எரிவாயு கப்பல் நாளை(27) நாட்டை வந்தடையவுள்ளது.

தொடர்ச்சியான இந்த விநியோக நடவடிக்கைகள் மூலம் சந்தையில் நிலவும் தட்டுப்பாடு விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.