பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டாமென கல்வி அமைச்சு தீர்மானம்!
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் முழுமையாக வழமைக்குத் திரும்பாத நிலை காரணமாக, 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டாமென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு சேதங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டில் தரம் 5 முதல் தரம் 13 வரை பாடசாலை நேரம் முன்னதாக நடைமுறையில் இருந்தபடியே காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாற்றமின்றி தொடரும்.
அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கு 7 பாடவேளைகள் நடைபெறுவதுடன், ஒவ்வொரு பாடவேளைக்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி,
- தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 21 முதல் ஆரம்பமாகும்.
- தரம் 1 மாணவர்களுக்கான அறிமுக செயற்பாடுகள் ஜனவரி 5 முதல் தொடங்கும் நிலையில்,
- உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 முதல் ஆரம்பமாகும்.
தரம் 1 இற்கான செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்கான கற்றல் தொகுதிகள் (Learning Modules) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய தரங்களுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும், 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிகள்
2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெறவுள்ளன.
இதுகுறித்த விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 2 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
