வான் பாயும் பல பிரதான நீர்த்தேக்கங்கள் - நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!


நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. 

நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் இதனைத் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரம், அநுராதபுரம் மாவட்டத்தின் மகாவிலச்சிய, மகாகனதராவ, இராஜாங்கனை நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர மற்றும் பதுளை மாவட்டத்தின் சொரபொர ஆகிய நீர்த்தேக்கங்கள் இதில் அடங்குவதாக அவர் தெரிவித்தார். 

மேலும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் வினாடிக்கு 6476 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் வினாடிக்கு 1164 கன அடி நீரும் கலா ஓயாவிற்கு விடுவிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்தாலும், வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், அந்த நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பொறியியலாளர் குறிப்பிட்டார். 

மேலும், கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் நீர்ப்பாசனத் திட்டங்களின் கட்டுமானங்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால், அந்த சேதங்களுக்கான தற்காலிக புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதன்படி, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வலது கரை கால்வாய் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்றுடன் நிறைவடையும் என்றும், அதனூடாக அந்த நீர்த்தேக்கத்தின் மூலம் பயன்பெறும் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தெதுரு ஓயா, இராஜாங்கனை, நாச்சதூவ மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் ஏனைய நடுத்தர நீர்த்தேக்கங்களினது வான் கதவுகளைத் திறந்து நீர்மட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.