இஸ்ரேல் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு!


காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள் முழுமையாக விலகவில்லை. துப்பாக்கிச்சூடும், குண்டு வீச்சும் அன்றாட நிகழ்வாகவே தொடர்கின்றன.

 
இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது துருக்கி மற்றும் எகிப்து நாடுகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளன.
 
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துருக்கி வெளியுறவு மந்திரி ஹக்கன் பிடன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது,
 
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசாவில் தினந்தோறும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
 
அமெரிக்கா தலையிடாவிட்டால், இஸ்ரேலின் தினசரி போர் நிறுத்த மீறல்களால், அங்கு அமைதி திட்டத்துக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன் என்றார்.
 

முன்னதாக இஸ்ரேல் மீது எகிப்து வெளியுறவு மந்திரி பதர் அப்தெல்லட்டியும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இஸ்ரேலின் போர் நிறுத்த விதிமீறலை கண்காணிக்க காசா எல்லையில் அமைதிப்படையை நிறுத்த வேண்டும் என அவர் வலியறுத்தினார்.

இந்த கருத்தை துருக்கி வெளியுறவு மந்திரியும் வற்புறுத்தி உள்ளார். இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் தான் மீறுவதாகவும், இதற்கு பதிலடியாகத்தான் இராணுவம் தாக்குதல் தொடுப்பதாகவும் இஸ்ரேல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.