சமூகம், பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டே புதிய கல்விச் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது! - ஜனாதிபதி அனுர


சமூகம் மற்றும் பொருளாதாரத்தைக்  கவனத்தில் கொண்டே  நாட்டில் புதிய கல்விச்  சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார  திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘எமது நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்களில் மாணவர்கள் மிக முக்கியமானவர்கள். எனவே தான் கல்வி முறையில்  சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியமாகின்றது.

இப்புதிய சீர்திருத்தத்தில் பாடவிதானங்களில் மாத்திரம் கவனம் செலுத்தப்படவில்லை. எமது சமூகம் பொருளாதார இவை இரண்டையும் கவனத்திற்கொண்டே இக் கல்விச் சீர்திருத்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பார்த்தோமேயானால் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளோம்.  சிறந்த பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சிறந்த மாணவச்  சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் வறுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் கல்வி கற்பது அவசியமாகின்றது.

நாட்டில் குற்றச் செயல்கள் மற்றும்  போதைப்பொருள் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் பலர் , பாடசாலை கல்வி பயிலும் வயதுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவை அனைத்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமாயின் சிறந்த கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.

குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.

சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.