இன்று நாடு திரும்பினார் நாமல் ராஜபக்ஷ!
கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) நாட்டை வந்தடைந்தார்.
நாமல் ராஜபக்ஷ நேற்று (28) தனிப்பட்ட விஜயத்திற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டிருந்நதார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்குச் சென்ற அதே விமானத்தில் நேற்று காலை அவர் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இன்று அவர் ஒரு மனு மூலம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனைக்கு எதிரான போராட்டத்தின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் ஓஷத மகாராச்சி நேற்று நாமலுக்கு பிடியாணை பிறப்பித்திருந்தார்.
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட 08 பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் ஆஜராகாததால், நாமலை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமை நீதவான் உத்தரவிட்டார்.