இன்று ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்பான நிபுணத்துவ கலந்துரையாடல் கொழும்பில்!


ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமீபத்திய மோதல் மற்றும் அதன் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய தாக்கங்களை ஆராய்வதற்காக நிபுணத்துவ கலந்துரையாடலொன்று  இன்று (26) வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 10 விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

(Sri Lanka Journalists for Global Justice) உலகளாவிய நீதிக்கான இலங்கை பத்திரிகையாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இக் கலந்துரையாடலில் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் டாக்டர் ரவூப் ஸெய்ன்,  சண்டே டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இந்த விவாதம், ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கங்கள், நடுநிலை நாடுகளின் பங்கு, பாதுகாப்பு சவால்கள் மற்றும் எதிர்கால நிலைமைகள் பற்றி ஆழமான பார்வையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.