தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இந்த குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.2022 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் இலங்கையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளில் அடிப்படையில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவத்தின் பிரதான குற்றவாளிகளாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.
பிரதான குற்றவாளிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைக்காக 350க்கும் மேற்பட்ட சாட்சியாளர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.