வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அனுமதி


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலையால் பெருமளவிலான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, 2009 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த இரண்டு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவைகளால் வழங்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்கத்தில் 550 சதுர அடி வீடுகளுக்கான கட்டுமானச் செலவாக ரூ. 1,100,000/= மற்றும் 340 சதுர அடி வீடுகளுக்காக ரூ. 650,000/= என மதிப்பீடு செய்யப்பட்டது. 

இருப்பினும், தற்போதைய கட்டிடப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இந்த வீடுகளுக்கான செலவுகள் முறையே ரூ. 1,600,000/= மற்றும் ரூ. 950,000/= என புதுப்பித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2025 முதல் அமுலுக்கு வரும் வகையில், பயனாளிகள் தாங்களே வீடுகளை நிர்மாணிக்கும் முறையில் அரசினால் வழங்கப்படும் நிதி உதவியை 550 சதுர அடி வீடுகளுக்கு ரூ. 1,500,000/= ஆகவும், 340 சதுர அடி வீடுகளுக்கு ரூ. 900,000/= ஆகவும் அதிகரிக்க நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.