முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
முகத்தின் நிறத்தை வெண்மையாக்கும் பெயரில் தரமற்ற மற்றும் ஆபத்தான கிரீம்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் தனுஷா பாலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தகவலை தனது சமூக வலைத்தளப் பதிவில் பகிர்ந்துள்ளார் அவர். முகம் வெண்மையாக்கும் வகையில் சந்தையில் கிடைக்கும் பல க்ரீம்கள் பாதுகாப்பற்றவை எனவும், அவற்றைப் பயன்படுத்தி தோலில் பக்கவிளைவுகள் ஏற்பட்ட நோயாளர்களுக்கு அவர் சிகிச்சையும், ஆலோசனைகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
"தரமற்ற இந்த கிரீம்கள் பலரும் எளிதில் வாங்கக்கூடிய வகையில் கடைகளில் அன்றாடம் கிடைக்கின்றன. அதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் முக்கியமாக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பார உலோகங்கள் அதிக அளவில் உள்ளன. பணம் கொடுத்து நோயை வாங்கும் செயல் தான் இது.
வெண்மைத் தோல் வேண்டும் என்ற மாயையை விட்டுவிட்டு, ஆரோக்கியமாக இருக்க முயற்சிப்போம் என வைத்தியர் தனுஷா பாலேந்திரன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.