‘இந்தியா ஒரு சத்திரம் அல்ல; அகதிகளை வரவேற்க முடியாது : இலங்கை தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!
“இந்தியா ஒரு சத்திரம் அல்ல, உலகம் முழுவதிலிருந்து அகதிகளை வரவேற்க முடியாது. ஏற்கனவே 140 கோடி மக்களுடன் இந்தியா போராடி வருகிறது” என்று இலங்கை தமிழரின் மனு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இலங்கை தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, இந்தியாவில் குடியேறுவதற்கு அகதிகளுக்கு உரிமை இல்லை என்று கூறியது.
இந்த வழக்கு தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இலங்கை தமிழர் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் உச்சநீதிமன்றத்தில் மேல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், உச்சநீதிமன்றம் இந்தியாவில் அகதிகளை வரவேற்க முடியாது என்று தெரிவித்தது.
நீதிபதி திபங்கர் தத்தா, “இந்தியா ஒரு சத்திரம் அல்ல, உலகம் முழுவதிலிருந்து அகதிகளை வரவேற்க முடியாது. ஏற்கனவே 140 கோடி மக்களுடன் இந்தியா போராடி வருகிறது,” என்று கூறினார்.
மனுதாரரின் வழக்கறிஞர், அவரது குடும்பம் இந்தியாவில் வசிப்பதாகவும், இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வாதிட்டார்.
மேலும், மனுதாரர் மூன்று ஆண்டுகளாக நாடு கடத்தல் நடவடிக்கைகள் இல்லாமல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், நீதிபதி தத்தா, “இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?” என்று கேள்வி எழுப்பி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 மற்றும் 21 ஆகியவை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று விளக்கினார்.
மனுதாரர் தரப்பில், அவர் விசாவுடன் இந்தியாவுக்கு வந்தவர் என்றும், இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருப்பதால் திரும்ப முடியாது என்றும் வாதிடப்பட்டது. மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் வசிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்கவில்லை. “வேறு எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்,” என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தியாவில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை தமிழர் ஒருவரின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்தியாவில் அகதிகளை வரவேற்க முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளது.