காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திய பிரதமர் ஹரிணி!
காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்திய பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, பசி மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் உணவு முற்றுகையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
நக்பா 77ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, “நக்பாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பலஸ்தீன மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் சர்வதேச நடவடிக்கை” என்ற ஐ.நா. கருப்பொருளின் கீழ், கொழும்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வு பலஸ்தீன தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை – பலஸ்தீன ஒருமைப்பாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பலஸ்தீன தூதர் இஹான் ஐ.எம். கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கை – பலஸ்தீன ஒருமைப்பாட்டு குழுவின் தலைவர் ஜாசிம் ஜாபர் அல்-சொரூர், இராஜதந்திர பீடத்தின் முதல்வர், ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் தனது உரையில், பலஸ்தீனத்திற்கு இலங்கை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் எப்போதும் ஆதரவாக இருந்து, இரு-நாடு தீர்வை முன்னிறுத்தி செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சுதந்திரமான பலஸ்தீன நாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பலஸ்தீன விவகாரத்தில் இலங்கை உறுதியாக நின்று, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், “நாம் ஒரு மனிதாபிமான பேரவலத்தை கண்டு வருகிறோம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,” என கூறினார்.
நிகழ்வில் பலஸ்தீன தூதர் இஹாப் ஐ.எம். கலீலும் கலந்துகொண்டார்.