50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்தான கடல் நிலைமைகள் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜெ.கஹவத்த அவர்கள் இது தொடர்பில் மீனவ சமூகத்தை அவதானத்துடன் இருக்குமாறும், விபத்துகளைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிவிப்புக்கமைய, சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிரதேசத்திலும், அத்துடன் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய ஆபத்து உள்ளது.