4 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று!


இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. 

காசியாபாத்தில் 14 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மெஹ்ராலியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தைக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சுகாதாரத் துறை வட்டாரங்களின்படி, குழந்தை தொடர்ந்து இரண்டு நாட்களாக லேசான சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது.

மாறிவரும் வானிலை காரணமாக பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் செய்த குழந்தையின் குடும்பத்தினர், இறுதியில் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் மருத்துவ உதவியை நாடினர்.

அங்கு, குழந்தை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மருத்துவக் குழுக்கள் உடனடியாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்களைப் பரிசோதித்தனர். 

அவர்கள் அனைவருக்கும் கோவிட் - நெகட்டிவ் அதாவது தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.

வீட்டிற்குள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு குடும்பமும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

யாரும் பாதிக்காதபோதும் வைரஸ் எவ்வாறு குழந்தையை அடைந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக காசியாபாத்தின் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார்.