குடிபோதையில் பணிக்கு வந்த வைத்தியர்; ஆத்திரமடைந்த மக்கள் அதிரடி!


கம்பளை புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் குடிபோதையில் பணிக்கு வந்த மருத்துவ அதிகாரி, பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 14 ஆண்டுகளாக இந்த வைத்தியசாலையில் பணியாற்றிய இந்த மருத்துவ அதிகாரி அதிகப்படியான மதுப்பழக்கத்தால், நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து, மக்கள் சுகாதார சேவைகளில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால், 2019 முதல் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.  

மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும், சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சு பலமுறை எச்சரித்தும், இந்த மருத்துவ அதிகாரியின் மதுப்பழக்கம் தொடர்ந்தது. இதனால் கடந்த 5ஆம் திகதி, கம்பளை-நுவரெலியா பிரதான வீதியை மக்கள் மறித்து, வைத்தியசாலை முன்பு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதையடுத்து, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய உடனடியாக தலையிட்டு, அந்த மருத்துவ அதிகாரியை இடமாற்றம் செய்து புதிய நிர்வாகத்தை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.  

மருத்துவர்களின் நடத்தை, ஜாதி, மதம், குல வேறுபாடுகள் இல்லாதிருக்க வேண்டும் எனவும், வைத்தியரிடம் வருவோர் அனைவரும் நோயாளிகள் மட்டுமே எனவும் பணிப்பாளர் வலியுறுத்தினார். மேலும், வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  

இதைத் தொடர்ந்து, கலந்துரையாடலில் பங்கேற்ற மக்கள், மலையக பிரதிநிதிகள், வணிகர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வரும் 28ஆம் திகதி வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதாகவும், புதிதாக பொறுப்பேற்ற மருத்துவ அதிகாரி டாக்டர் முகமது பாஹிம் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, வைத்தியசாலையை மேம்படுத்த பாடுபடுவதாகவும் தெரிவித்தனர்.