இன்றுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் மே 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மே 3ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று வரை வீடுகளுக்கு சென்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் தங்கள் பகுதியில் உள்ள உப தபால் அலுவலகத்திற்குச் சென்று தமக்கான வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேசமயம், நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 94 வீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.