மகளின் திருமணத்தால் பறிபோன தந்தையின் உயிர்!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவரான ரிசிராஜ் என்ற சஞ்சு ஜெய்ஸ்வால் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு ஹர்ஷிதா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஹர்ஷிதா அந்த பகுதியை சேர்ந்த வேற்று சமூக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையில், அந்த வாலிபருடன் சில நாட்களுக்கு முன்பு ஹர்ஷிதா வீட்டை விட்டு சென்றுள்ளார்.
மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ரிசிராஜ் குவாலியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து, பொலிஸாரின் தேடுதலில் சிக்கிய காதல் ஜோடியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும், நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவரோடு தான் நான் செல்வேன் என்றும் ஹர்ஷிதா நீதிமன்ற விசாரணையில் கூறியுள்ளார்.
ரிசிராஜ் மற்றும் அவரது மனைவி தனது மகளிடம் எவ்வளவோ மன்றாடி கேட்டும் ஹர்ஷிதா கணவரை விட்டு வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ரிசிராஜ் விரக்தி அடைந்து சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டதுடன், சோதனையின் போது கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். தனது மகளின் ஆதார் அட்டையில் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஹர்ஷிதா நீ செய்தது தவறு. நான் கிளம்புகிறேன். உங்கள் இருவரையும் நான் கொன்றிருக்கலாம். ஆனால் என் மகளை நான் எப்படி கொல்ல முடியும். ஒரு தந்தையின் வலி யாருக்கும் புரியவில்லை. ஒரு முழு குடும்பமும் அழிக்கப்பட்டு விட்டது. இப்போது சமூகத்தில் எதுவும் மிச்சமில்லை என்று எழுதியுள்ளார்.
மேலும் அவர் பெற்றோரின் உரிமைகள் மற்றும் வயது வந்த குழந்தைகள் சம்பந்தப்பட்ட சட்ட செயல்முறைகள் பற்றியும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
