15 வயது சிறுவனை பாகிஸ்தான் கொடியில் சிறுநீர் கழிக்க வைத்த கும்பல்!


கடந்த திங்கட்கிழமை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 15 வயதுச் சிறுவன் ஒருவனை  மதவாத மனோபாவம் கொண்ட குழுவொன்று தாக்கியதாக பரபரப்பு சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த சிறுவன், பாகிஸ்தான் கொடியை அகற்றியதாகக் கூறி குறி வைக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில், பாடசாலை சீருடையில் உள்ள அந்த சிறுவனை இழுத்துச் சென்று, ‘இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷங்களை முழக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அத்துடன், பாகிஸ்தான் கொடியின் மீது சிறுநீர் கழிக்க வற்புறுத்தியதும் இந்தக் குழுவினரின் பயங்கரத்தன்மையை வெளிக்கொணர்கிறது.

இந்த சம்பவம், நகர காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு அருகில் நிகழ்ந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் சில காவல்துறை அதிகாரிகள் அருகிலேயே இருந்தும், தலையீடு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடக அறிக்கையின் படி, பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் ஒட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அந்த சிறுவன் அறியாமலே அகற்றியதாகவும், அவனுக்குத் தெரிந்தே எதுவும் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

“நான் என் நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். சாலையில் ஏதோ ஒட்டப்பட்டிருப்பதாக அவர்கள் சொன்னதால் அதை எடுத்தேன். அப்போது அவர்கள் என்னை தாக்கினர்,” என சிறுவன் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ள நிலையில், காவல்துறை விசாரணை நடைபெறுகின்றன.

இதற்கிடையில், காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடைபெற்ற  தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், கடந்த வாரம் ஆக்ராவைச் சேர்ந்த 25 வயது பிரியாணி விற்பனையாளர் முகமது குல்ஃபாம் என்பவர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் இதனை உறுதிப்படுத்துகிறது.