நீதிபதிகளின் ஓய்வு வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மாற்றும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு!
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழிந்து, இலங்கை அரசாங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (07) வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆண்டுகளாக உயர்த்தப்படவுள்ளது.
மேலும், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை அடைந்தபோதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தபோதோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதன் அடிப்படையில் ஓய்வுபெற வேண்டும் எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவின் பேரில், குறித்த 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
