இணையதளம் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் - இளம் பெண் கைது!


பிரபல வர்த்தக நாமம் ஒன்றை போலியாக பயன்படுத்தி, இணையம் வழியாக அதிக வருமானம் பெறலாம் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேக நபர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரிடமிருந்து மொத்தமாக 426,300 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்ட விசாரணைகளில் மோசடி செய்யப்பட்ட தொகையில் 186,500 ரூபாய் சந்தேக நபரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.