அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!


இலங்கையை டிஜிட்டல் பொருளாதார நோக்கில் முன்னேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரச சேவையை டிஜிட்டல்மயமாக்குவதற்கும் அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் ஆகியோரின் தலைமையில் நேற்று (03) நடைபெற்றது.

உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப அரச சேவையின் செயல்திறனை உயர்த்துதல், சேவை தாமதங்களைக் குறைத்தல் மற்றும் அரச அதிகாரிகளின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக சிரேஷ்ட அதிகாரிகளிடையே காணப்படும் தொழில்நுட்ப அச்சத்தை குறைத்து, இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்கு மின்னணு கற்றல் (E-Learning) முறையின் ஊடாக பயிற்சி வழங்குவதுடன், கைபேசிகள் மூலம் அணுகக்கூடிய குறுகிய காணொளிப் பாடங்கள் வழியாக நுண் கற்றல் (Micro Learning) முறையையும் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களின் ஆண்டு செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் பதவி உயர்வுகளுக்கு டிஜிட்டல் எழுத்தறிவு பயிற்சியை கட்டாயமாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பயிற்சிகளுக்காக அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலை கணினி ஆய்வகங்களைப் பயன்படுத்துவதுடன், விளையாட்டுமயமாக்கப்பட்ட கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தவும், டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய சான்றிதழ்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல், புதிய பணியாளர்களுக்கு டிஜிட்டல் தகுதிகளை கட்டாயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கேற்ற பாடசாலை, பல்கலைக்கழக பாடத்திட்டங்களை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆரம்ப கட்டமாக, அரச அதிகாரிகளுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியும், அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்த செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.